கடன்கள் தீர்ந்து செல்வங்கள் பெறுக தை வெள்ளி மஹாலக்ஷ்மியின் வழிபாடு..!

Advertisement

தை வெள்ளி பூஜை செய்யும் முறை | Thai Velli Poojai Seiyum Murai In Tamil   

தை மாதம் என்றாலே சிறப்பு தான் அந்த வகையில் தை வெள்ளி நாட்களில் மகாலட்சுமிக்கு பூஜை செய்து வழிபட்டு வந்தால் நம் செல்வங்கள் பெருகும் என்று சொல்லப்படுகிறது. தை மாதம் வரும் ஒவ்வொரு வெள்ளி கிழமையும் வீட்டிலோ அல்லது கோவிலுக்கோ சென்று பூஜை செய்ய வேண்டும். பொதுவாக வெள்ளி கிழமை என்றாலே அம்பிகை வழிபாட்டிற்குரிய நாளாகும். வெள்ளி கிழமை அன்று பெண்கள் கோவிலுக்கு சென்று பூஜை செய்து வீட்டிலும் விளக்கேற்றி வழிபடுவார்கள்.

ஆடி வெள்ளி மற்றும் தை வெள்ளி என்றால் அது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த சிறப்பான நாட்களில் பெண்கள் அவர்கள் வீட்டில் அனைத்து தை வெள்ளி நாட்களிலும் விஷேசமாக  பூஜை மேற்கொள்வார்கள். அதே போல் கோவில்களுக்கு சென்று பூஜையும் செய்வார்கள். சிலருக்கு வீட்டில் எப்படி பூஜை செய்யவேண்டும் என்று தெரியாமல் இருப்பார்கள் அவர்களுக்கு உதவிடும் வகையில் இந்த பதிவின் மூலம் எப்படி வீட்டில் பூஜை செய்யவேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம்.

Kadan Prachanai Theera Valigal

தை வெள்ளி வழிபாடு:

வெள்ளி கிழமை என்றாலே பெண் தெய்வ வழிபாட்டிற்குரிய உகந்த நாளாகும். அதிலும் மஹாலக்ஷ்மியை வழிபடுவது நம்மிடம் உள்ள பண கஷ்டங்களை தீர்த்து செல்வங்களை அள்ளி தரும் என்பது ஐதீகம். வெள்ளி கிழமையை சுக்கிர வாரம் என்று சொல்லுவார்கள். ஒவ்வொரு நாளும் நல்ல நேரம், ராகு காலம் என்று இருப்பது போல் ஹோரைகளும் உள்ளன. வெள்ளிக்கிழமை சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த நாள் என்பதால் இந்த நாளில் சுக்கிர ஹோரையில் மகாலட்சுமிக்கு சில குறிப்பிட்ட முறைகளில் வழிபாடு செய்தால் வீட்டில் செல்வம் சேரும்.

பூஜை செய்யும் முறை:

வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு, வீட்டின் பூஜை அறையில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் மலர்கள் அணிவிக்க வேண்டும். மகாலட்சுமியின் படத்தின் முன் வெற்றிலையின் மீது பச்சரிசியை வட்டமாக வைத்துக்கொள்ள வேண்டும், அதன் மீது அகல் விளக்கை வைத்து நெய் தீபம் ஏற்ற வேண்டும். இதேபோல் சிறிய வாழை இலையின் மீது கல் உப்பை வட்டமாக வைத்து அதன் மீது அகல் வைத்து நெய் தீபம் ஏற்றலாம். முடியாதவர்கள் குத்துவிளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய்யால் ஐந்து முகங்களை ஏற்றி, நமது வேண்டுதலை கூறி வழி பட வேண்டும்.

ராகு கால நேரத்தில் அம்மன் கோவில்களுக்கு சென்று எலுமிச்சை விளக்கு அல்லது அகல் விளக்கில் நல்லெண்ணை ஊற்றி தீபம் ஏற்றலாம். அம்மனுக்கு சிவப்பு அரளி மாலை சாற்றி, சர்க்கரை பொங்கல், மாதுளை பழம், தயிர் சாதம் நைவேத்தியமாக வைத்து வழிபடலாம்.

வசதி இருப்பவர்கள் தை மாதம் வெள்ளி கிழமைகளில் அக்கம் பக்கத்தில் இருக்கும் பெண்களுக்கு வெற்றிலை பாக்கு, தாம்பூலம், ஆடைகள் வைத்து தாம்பூலம் கொடுக்கலாம்.

கடன் தீர பூஜை செய்யும் முறை:

மஹாலக்ஷ்மிக்கு எதாவது ஒரு இனிப்பு செய்து நைவேத்தியமாக படைக்க வேண்டும். ஒரு கண்ணாடி கிண்ணம் அல்லது அகண்ட அகலில் கல் உப்பினை முக்கால் பங்கிற்கு நிரப்ப வேண்டும். அதன் மீது 3 பத்து ரூபாய் நோட்டு மற்றும் 3 ஒரு ரூபாய் நாணயம் வைத்து, மகாலட்சுமியிடம் நம்முடைய வேண்டுதலை சொல்லி வழிபட வேண்டும். அன்று முழுவதும் அதை அப்படியே வைத்து விட வேண்டும். மறுநாள், அந்த 33 ரூபாய் பணத்தை எடுத்து பீரோவில் தனியாக வைத்து விடுங்கள். அந்த உப்பினை கால்படாத இடத்திலோ அல்லது ஓடும் தண்ணீரிலோ விட்டு விட வேண்டும்.

இதே போல் தொடர்ந்து 4 வாரங்கள் புதிய உப்பு, தனித்தனியாக 33 ரூபாய் வைத்து வழிபட வேண்டும். நான்காவது வாரம் தனியாக 4 முறை எடுத்து வைத்த 33 ரூபாய் பணத்தை எடுத்து அருகில் உள்ள அம்மன் கோவிலில் உண்டியலில் சேர்த்து விட வேண்டும். இப்படி செய்தால் அடமானமாக வைத்த நகைகள், நாள்பட்ட கடன்களை அடைக்க பணம் வரும்.

தை வெள்ளி நான்கு வாரம் விரதம்:

தை மாதம் நான்கு வாரமும் விரதம் இருந்து வழிபடுபவர்கள் நினைத்த காரியம் நடைபெறும், எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது ஐதீகம். ஒவ்வொரு வாரமும் அம்மனுக்கு பிரசாதம் செய்யும் உணவை மட்டுமே சாப்பிட்டு விரதம் இருப்பது நல்லது.

தை அமாவாசை வழிபடும் முறை 2024

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement