வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உழைப்பு பற்றி திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்..!

Updated On: April 29, 2025 5:57 PM
Follow Us:
Ulavu Thirukural in Tamil
---Advertisement---
Advertisement

Ulavu Thirukural in Tamil

பொதுவாக இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொருவருமே உழைப்பாளர்கள் தான். அதாவது கல்லுடைப்பவர் முதல் கணினி தட்டுபவர் வரை அனைவருமே உழைப்பாளர்கள் தான். அப்படி நம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவர்கள் உழைப்பாளர்கள் தான். ஆகவே உழைப்பாளர்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் மே 1-ம் தேதியை  தொழிலாளர்கள் தினமாக கொண்டாடி வருகின்றோம்.

அதுமட்டுமில்லாமல், எப்போதும் ஓய்வில்லாமல் உழைக்கும் மக்களுக்கு விடுமுறை அளிக்கும் நாளாக மே 1 ஆம் தேதி உள்ளது. சரி உங்களுக்கு தெரியுமா ஏன் மே 1-ம் தேதி உழைப்பாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது என்று..? அதை தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.  உழைப்பாளர் தின வரலாறு

உழைப்பை பற்றி பல விதத்தில் கூறியுள்ளார்கள். அதாவது கவிதை, பழமொழி போன்ற எல்லா விதத்திலும் கூறியுள்ளார்கள். அது போல 1330 குறள்களும் ஒவ்வொன்று அர்த்தத்தை சொல்கிறது. அதில் உழைப்பை பற்றியும் கூறியுள்ளார்கள். உழைப்பை பற்றி பல குறள்கள் இருக்கிறது அதனை பற்றி தெரிந்து கொள்வதற்கு இந்த பதிவை முழுமையாக படித்து அறிந்து கொள்ளுங்கள்.

உழவு திருக்குறள் அதிகாரம் 104: 

குறள் 1031:

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

மு.வ விளக்க உரை:

உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

சாலமன் பாப்பையா விளக்க உரை: 

உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது.

கலைஞர் விளக்க உரை:

பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.

குறள் 1032:

உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை எல்லாம் பொறுத்து.

மு.வ விளக்க உரை:

உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:

உழவுத் தொழிலைச் செய்ய முடியாமல் பிற தொழிலைச் செய்யச் செல்வோர் எல்லாரையும், உழவர்களே தாங்குவதால் அவர்களே இந்த உலகத்தவர்க்கு அச்சாணி ஆவர்.

கலைஞர் விளக்க உரை:

பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்.

குறள் 1033:

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

மு.வ விளக்க உரை:

உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.

சாலமன் பாப்பையா விளக்க உரை:

பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்.

கலைஞர் விளக்க உரை:

உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.

குறள் 1034:

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.

மு.வ விளக்க உரை:

நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:

உழுவதால் தானிய வளமும் அதனால் அருளும் உடைய உழவர்கள், தம் ஆட்சியாளர்களின் குடை நிழலை அயலக ஆட்சியாளரின் கீழ் வாழும் மக்களும் விரும்பும்படி செய்வர்.

கலைஞர் விளக்க உரை:

பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்

குறள் 1035:

இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்

மு.வ விளக்க உரை:

கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார், தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:

தம் கையால் உழுது உண்ணும் இயல்பை உடையவர் பிறரிடம் பிச்சை கேட்கமாட்டார்; தம்மிடம் கேட்டு வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கவும் செய்வர்.

கலைஞர் விளக்க உரை:

தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்

குறள் 1036:

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கும் நிலை

மு.வ விளக்க உரை:

உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.

சாலமன் பாப்பையா விளக்க உரை:

உழுபவர் கை மட்டும் வேலை செய்யாது மடங்கிவிட்டால், எல்லாரும் விரும்பும் உணவையும், நாம் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவியரும்கூட அவரது அறத்தில் நிலைத்து நிற்க முடியாது.

கலைஞர் விளக்க உரை:

எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்.

குறள் 1037:

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்

மு.வ விளக்க உரை:

ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தில் பயிர் செலுத்தி செழித்து விளையும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:

உழுத மண்ணை, ஏறத்தாழ 35 கிராம் புழுதி, 8.75 கிராம் புழுதி ஆகும்படி காய விட்டுப் பிறகு பயிர் செய்தால் ஒரு கைப்பிடி அளவு எருவும் இடாமலேயே கூட அந்தப் பயிர் அதிகம் விளையும்.

கலைஞர் விளக்க உரை:

ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்.

குறள் 1038:

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு

மு.வ விளக்க உரை:

ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது.

சாலமன் பாப்பையா விளக்க உரை:

உழுவதைக் காட்டிலும் உரம் இடுவது நல்லது; நீர்ப் பாய்ச்சுவதைக் காட்டிலும் களை எடுத்தபிறகு பயிரைக் காவல் செய்வது நல்லது.

கலைஞர் விளக்க உரை:

உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது.

குறள் 1039:

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்
தில்லாளின் ஊடி விடும்

மு.வ விளக்க உரை:

நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால் அந் நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:

நிலத்திற்கு உரியவன் நாளும் நிலத்திற்குச் சென்று செய்ய வேண்டியதைச் செய்யாது சோம்பி இருந்தால், கடமை ஆற்றாத கணவனை முதலில் மனத்தால் வெறுத்துப் பின் அவனோடு ஊடி விடும் மனைவியைப் போல நிலமும் முதலில் வாடிப் பிறகு பலன் தராமல் போய்விடும்.

கலைஞர் விளக்க உரை:

உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும்.

குறள் 1040:

இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.

மு.வ விளக்க உரை:

எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:

நிலமகள் என்னும் நல்ல பெண், நாம் ஏதும் இல்லாத ஏழை என்று சோம்பி இருப்பவரைக் கண்டால் தனக்குள் ஏளனமாய்ச் சிரிப்பாள்.

கலைஞர் விளக்க உரை:

வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்.

உழவு திருக்குறள் Pdf  Pdf 
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now