காரைக்கால் அம்மையார் | Karaikkal Ammayar
பேரழகும், தெய்வீக அம்சமும் கொண்ட அம்மையார், சிறுவயதில் இருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தவர். புனிதவதி என்ற இயற்பெயரைக்கொண்ட காரைக்கால் அம்மையார், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும், பெண் நாயன்மார்கள் மூவரில் மூத்தவர் என்ற பெருமைக்கும் உரியவர். ” காரைக்காலின் மதிப்பிற்குரிய தாய் ” என்று போற்றப்படும் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
Karaikkal Ammayar Valkkai Varalaru in tamil:
தமிழகத்தில், கி.பி. 300-500-களில், காரைக்கால் என்ற ஊரில், வணிகர் தனதத்தருக்கும் தர்மவாதிக்கும் மகளாகப் பிறந்தவர் புனிதவதி என்ற இயற்பெயர் கொண்ட காரைக்கால் அம்மையார். இளம் வயதிலேயே சிவபெருமானிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவர். மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரான இவர். கயிலை மலைமீது கைகளால் நடந்துச்சென்ற போது சிவபெருமான் “அம்மையே” என்று அழைத்ததாலும், காரைக்கால் நகரில் பிறந்ததாலும் இவரை காரைக்கால் அம்மையார் என்று அழைக்கின்றனர்.
காரைக்காலில் வணிக குலத்தில் பிறந்த அம்மையார், பரமதத்தன் என்ற வணிகரை மணமுடித்து இல்வாழ்க்கை வாழ்ந்துவந்தார். இல்லம் தேடி வரும் சிவனடியார்களுக்கு இனிய முகத்துடன் உணவு படைப்பார்.
சிவனடியார்க்கு அன்னம் வழங்குதல் :
ஒருநாள் காலை பரமதத்தன், தனக்கு கிடைத்த இரு மாங்கனிகளை புனிதவதியாரிடம் கொடுத்துச் சென்றிருந்தார். அன்றைய தினம் அம்மையாரின் வீட்டிற்கு சிவனடிகள் ஒருவர் வந்தார், அவரை வரவேற்று அவருக்கு தயிர்கலந்த அன்னம் படைத்து, அத்துடன் தனது கணவன் கொடுத்து சென்ற ஒரு மாங்கனியையும் தந்து உபசரித்தார். அதனை உண்ட சிவனடியார் அம்மையாரை வாழ்த்திச் சென்றார்.
அம்மையார் இறைவனிடம் மாங்கனி பெறுதல்:
மதிய உணவிற்கு வந்த பரமதத்தன், காலையில் கொடுத்துச்சென்ற மாங்கனிகளை உணவுடன் சாப்பிட கேட்டான். சிவனடியருக்கு கொடுத்தது போக மீதம் இருந்த ஒரு மாம்பழத்தை கணவருக்கு கொடுத்தார், அதனை உண்டுவிட்டு, ருசியாக இருக்கிறது என்று மற்றொரு மாங்கனியும் கேட்டார் பரமதத்தன். புனிதவதியார் செய்வதறியாது பூஜை அறை சென்று இறைவனிடம் வேண்டினர். இறைவன் திருவருளால் அவர் கையில் ஒரு மாங்கனி வந்தது. அதனை உண்ட பரமதத்தன், “இதன் சுவை அந்த பழத்தை விட மிக அற்புதமாக இருக்கிறதே! இந்தக் கனி எப்படி கிடைத்தது?” என்று கேட்டார்.
புனிதவதி நடந்ததை விளக்கினார். அதை பரந்தாமன் நம்பமறுத்தார், “அப்படி என்றால் மீண்டும் கனி பெற்று வா” என்று கூறினார். புனிதவதி மீண்டும் இறைவனிடம் சென்று வணங்கினர். மீண்டும் ஒரு கனியைப் பெற்று அவனிடம் கொடுத்தார் புனிதவதி அம்மையார். ஆனால், அந்தக் கனி பரமதத்தன் கைக்கு சென்ற உடனே மறைந்து விட்டது.
மனைவி தெய்வ சக்தி வாய்ந்தவள் என்று உணர்ந்து, அவருடன் இணைந்து வாழ தான் தகுதியற்றவன் என எண்ணி, அவளிடமிருந்து பிரிந்து கடல் கடந்து வணிகம் செய்யச் சென்றான், பிறகு நிறைய பொருள் திரட்டித் திரும்பிவந்து பாண்டிய நாட்டில் ஒரு செல்வந்தரின் மகளைத் திருமணம் செய்து வாழ்ந்து வந்தான். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு, ‘புனிதவதி’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். பரமதத்தன் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி, அம்மையாருடைய உறவினர்களுக்கு, மற்ற வணிகர்கள் மூலம் தெரிய வந்தது.
அவர்கள் அம்மையாரை அழைத்துக்கொண்டு பாண்டிய நாட்டில் பரமதத்தன் இருக்கும் நகருக்கு வெளியே உள்ள ஒரு இடத்தில் தங்கி, அம்மையார் வந்திருக்கும் செய்தியை பரமதத்தனுக்கு ஒரு ஆள் மூலம் சொல்லி அனுப்பினர். தன்னைத் தேடிவந்த மனைவியைக் கண்ட பரமதத்தன் அவரைத் தெய்வமாக வணங்கித் தனது இரண்டாவது மனைவி மற்றும் குழந்தையுடன் காலில் விழுந்தார்.
அதன் பிறகு “கணவருக்காக தாங்கிய உடல் நீங்கி, இறைவரைப் போற்றுகின்ற பேய்வடிவத்தை அடியேனுக்கு நற்பாங்கு பொருந்த அருளவேண்டும்” என்று இறைவனிடம் வேண்டிய அம்மையார். அனைவரும் வணங்கும் சிவனடியார் வடிவம் பெற்றார்.
கயிலாயத்தில் சிவனிடம் வரம் பெறுதல்:
தொடர்ந்து, அம்மையார் இறைவனைக் காண கயிலாயம் சென்றார். கயிலாயம் இறைவன் உறையும் புனிதமான இடம் என்பதால், அங்கு தரையில் கால் ஊன்றாமல், தலைகீழான நிலையில் அம்மையார் நடந்துச் சென்றார். இதனை பார்த்த சிவபெருமான், “அம்மையே வருக. அமர்க” என அழைத்து, “நீ வேண்டுவன கேள்” என்றார். அதற்கு அம்மையார் “பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும், இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி, அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க” என்றார்.
காரைக்கால் அம்மையார் இயற்றிய நூல்கள்:
இவர் தான் இசைத்தமிழால் இறைவனை முதன்முதலில் வழிபட்டவர். தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவரும் இவர் தான்.
தேவார காலத்திற்கு முன்பே இசைத்தமிழால் சிவபெருமானை பாடியவர் என்பதால் “இசைத்தமிழின் அன்னை” என்று அழைக்கப்படுகிறார்.
அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை போன்ற சைவ நூல்களை தமிழில் எழுதியுள்ளார்.
இவருடைய பதிக முறைகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் இயற்றப்பட்டதாக நம்பப்படுகிறது.
காரைக்கால் அம்மையார் பதினோராம் திருமுறையுள் 2வது பனுவல்களை பாடியுள்ளார். மொத்தம் 4 பனுவல்களை பதினொராம் திருமுறையுள் பாடியுள்ளார்.
திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் 1 – 11 படல்கள்
திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் 2 – 11 படல்கள்
திருவிரட்டை மணிமாலை – 20 பாடல்கள்
அற்புதத் திருவந்தாதி – 101 பாடல்கள். போன்ற 200 க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.
மாங்கனித் திருவிழா:
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அம்மையாரை மூலவராக் கொண்ட கோயில் உள்ளது. இதனை காரைக்கால் அம்மையார் கோயில் என அழைக்கின்றனர். இக்கோவிலில் அம்மையார் புனிதவதி என்ற இளமை தோற்றத்தோடு காட்சியளிக்கிறார். இந்த சன்னதியின் சுதைச் சிற்பங்களிலும், சுற்றுப் பிரகார ஓவியங்களிலும் காரைக்கால் அம்மையின் வாழ்க்கை வரலாறு சொல்லப்பட்டுள்ளது.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில், காரைக்கால் அம்மையார் கோவிலில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் ஒரு மாதக்காலம் மாங்கனித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |