ஓடி விளையாடு பாப்பா பாடல் வரிகள்

Advertisement

ஓடி விளையாடு பாப்பா பாடல் வரிகள்

பொதுவாக பள்ளி பருவத்தில் வாழ்த்து பாடல், தேசிய கீதம், மனப்பாட பாடல் போன்றவை படித்திருப்போம். அதன் பிறகு வளர சினிமா பாடல் அதிகமாக கேட்டிருப்போம். சினிமா பாடல்களின் வரிகளை விட நாம் பள்ளி பருவத்தில் படித்த சில பாடல் வரிகள் மறக்கவே முடியாது. செந்தமிழ் நாடெனும் போதினிலே பாடல், மற்றொன்று ஓடி விளையாடு பாப்பா பாடல் வரிகள் போன்றவை மறக்கவே முடியாது. எப்போது கேட்டாலும் மனப்பாடமாக சொல்வோம். ஆனால் இன்றைய காலத்தில் உள்ள பிள்ளைகளுக்கு பாடலின் வரிகள் தெரியவில்லை. அதனால் தான் இன்றைய பதிவில் ஓடி விளையாடு பாப்பா பாடல் வரிகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

ஓடி விளையாடு பாடல் வரிகள்:

ஓடி விளையாடு பாப்பா – நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா – ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.

சின்னஞ் சிறுகுருவி போலே – நீ
திரிந்து பறந்துவா பாப்பா
வண்ணப் பறவைகளைக் கண்டு – நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா

கொத்தித் திரியுமந்தக் கோழி – அதைக்
கூட்டி விளையாடு பாப்பா
எத்தித் திருடுமந்தக் காக்காய் – அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா

பாலைப் பொழிந்துதரும் பாப்பா – அந்த
பசுமிக நல்லதடி பாப்பா
வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா

வண்டி இழுக்கும்நல்ல குதிரை – நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு– இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா

காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு – என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா

பொய் சொல்லக் கூடாது பாப்பா – என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா
தெய்வம் நமக்குத்துணை பாப்பா – ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா

துன்பம் நெருங்கிவந்த போதும் – நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா
அன்பு மிகுந்ததெய்வ முண்டு –
துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா – தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி – நீ
திடங்கொண்டு போராடு பாப்பா

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற – எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
அமிழ்தில் இனியதடி பாப்பா– நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே– அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் –
அதைத் தினமும் புகழ்ந்திடடி பாப்பா

வடக்கில் இமயமலை பாப்பா – தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா
கிடக்கும் பெரியகடல் கண்டாய் – இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா

வேத முடையதிந்த நாடு – நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் – இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா

சாதிகள் இல்லையடி பாப்பா– குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்; நீதி,
உயர்ந்தமதி, கல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்
உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் – தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்–இது
வாழும் முறைமையடி பாப்பா

கோளறு பதிகம் பாடல் வரிகள்

லிங்காஷ்டகம் பாடல் வரிகள்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement