சொற்பூங்கா வினா விடை
வணக்கம் தோழிகளே இன்றைய பதிவில் எட்டாம் வகுப்பு இயல் 1 பாடத்தில் அமைந்துள்ள சொற்பூங்கா வினா விடைகளை படித்து தெரிந்துக்கொள்ளுவோம். மாணவர்களுடைய கற்றல் திறன் எளிமையாக அமைவதற்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் ஒவ்வொரு தேர்வாளர்களுக்கும் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க சொற்பூங்கா வினா விடைகளை படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
எட்டாம் வகுப்பு இயல் 1 தமிழ் வரி வடிவ வளர்ச்சி வினா விடைகள் |
கற்பவை கற்றபின்
ஓரெழுத்து ஒரு மொழிகள் இடம் பெறுமாறு ஐந்து தொடர்கள் எழுதுக.
- பழங்காலத்தில் போர் தொடங்கும் முன் ஆநிரைகளைக் கவர்ந்து வருவர். (ஆ- பசு)
- “கனமான பொருளைத் தூக்காதே, வை” என்று தாய் மகனிடம் கூறினார்.
- கந்தனுக்கு முருகன் கை கொடுத்து உதவி செய்தான்.
- தை மாதம் முதல் நாள் பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படும்.
- “நீ எங்கே சென்றாய்?” என்று சீதா ராணியிடம் கேட்டாள்.
பாடநூல் வினாக்கள்:
வினா:
தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கம் குறித்து இளங்குமரனார் கூறும் செய்திகளை தொகுத்து எழுதுக?
விடை:
முன்னுரை: மொழி என்பதற்குச் சொல் என்பதும் ஒரு பொருள். மொழியை (சொல்லை) ஓர் எழுத்து மொழி, ஈரெழுத்து மொழி, இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகள் உடைய மொழி என மூன்று வகையாக்குவர்.
ஓரெழுத்து ஒரு மொழி: உயிர் வரிசையில் ஆறு எழுத்துகளும், ம வரிசையில் ஆறு எழுத்துகளும், த, ப, ந என்னும் வரிசைகளில் ஐந்து ஐந்து எழுத்துகளும், க, ச, வ என்னும் வரிசையில் நான்கு நான்கு எழுத்துகளும், ய வரிசையில் ஒன்றும் ஆக நாற்பது நெடில்கள் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்றார் நன்னூலார். நொ, து என்னும் குறில்களையும் சேர்த்து நாற்பத்து இரண்டு என்றார்.
பூ-யா சொற்கள்: பூ என்பது ஓரெழுத்து ஒரு மொழி. கா என்பதும் ஓரெழுத்து ஒரு மொழி. இவை இரண்டையும் இணைத்துப் பூங்கா எனக் கலைச்சொல் ஆக்கி வைத்துள்ளனர். யா என்பது வினா. யாது, யாவர், யாவன், யாங்கு, யாண்டு, யார், யாவை என்றெல்லாம் வினாவுவதற்கு முன் வந்து நிற்கும் எழுத்து ‘யா’ தானே!
‘மா’ சொல்: மா என்பதும் ஓரெழுத்து ஒரு மொழிகளுள் ஒன்று. நாட்டிலுள்ள பெருமக்கள் பெரிதும் கூடும் அவையை மாநாடு என்கிறோம். பல குறு நிலங்களை உள்ளடக்கிய பெருநிலத்தை மாநிலம் என்கிறோம். மா என்பது விலங்கையும் குறிக்கும். அரிமா, பரிமா, நரிமா, வரிமா, கரிமா என்றெல்லாம் வந்து விலங்கினப் பெயராகி நிற்கின்றது.
ஈ-காரச் சொல்: ஈ என்னும் பொதுப் பெயர் ஓயாது ஒலி செய்யும் ஒலிக்குறிப்பைக் காட்டி நிற்கிறது. மாட்டு ஈ, தேன் ஈ எனப் பகுத்து வழங்கும் வழக்கம் உள்ளது. ஈ என்பது ஈக என்னும் பொருளில் வழங்குதல் வெளிப்படை. ஈ என்று பல்லைக் காட்டாதே என்று அறிவுரை கூறுவதும் உண்டு .
கால மாற்றத்தில் கரைந்தவை: இன்னொரு வகையாகவும் பார்க்கலாம். ஆன் என்பது ஆ ஆகியது; மான் என்பது மா ஆகியது; கோன் என்பது கோ ஆகியது; தேன் என்பது தே ஆகியது; பேய் என்பது பே ஆகியது இவையெல்லாம் கால வெள்ளத்தில் கரைந்து தேய்ந்தவை.
ஏகாரச் சொல்: எட்டத்தில் போகிற ஒருவனை ஏய் என அழைத்தனர். ஏய் என்பது என்னோடு கூடு, பொருந்து, சேர் என்னும் பொருளை உடையது. ஏய் என்பது ஏ என வழக்கில் ஊன்றிவிட்டது. அம்பை ஏவு என்பர். ஏவுதல் என்பது ‘அம்புவிடுதல்’ ஏவும் அம்பு ‘ஏ’ என்றாகியது. அம்பு விரைந்து செல்வது போலச் சென்று உரிய கடமை புரிபவன் ஏவலன் எனப்பட்டான். அம்புவிடும் கலையை ஏகலை என்றது தமிழ். அதில் வல்லவனை ஏகலைவன் என்று பாராட்டியது.
முடிவுரை: தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்களின் பெருக்கம் நம் மொழியின் பழமை, உயிரோட்டம், பெருவழக்கு என்பனவற்றைக் கையில் கனியாகக் காட்டும்.
எட்டாம் வகுப்பு தமிழ்மொழி மரபு வினா விடைகள் |
Samacheer Kalvi 8th Tamil Book Solutions Term 1 Chapter 1.4
ஓரெழுத்து ஒரு மொழிகள்:
- உயிர் எழுத்து : ஆ, ஈ, ஊ, ஏ ,ஐ ,ஓ.
- மகர வரிசை: மா, மீ, மூ, மே, மை, மோ
- தகர வரிசை: தா, தீ, தூ, தே, தை
- பகர வரிசை: பா, பூ, பே, பை, போ
- நகர வரிசை: நா, நீ, நே, நை, நோ
- ககர வரிசை: கா, கூ, கை, கோ
- சகர வரிசை: ச, சீ, சே, சோ
- வகர வரிசை: வா, வீ, வை, வௌ
- யகர வரிசை: யா
- குறில் எழுத்து: நொ, து
ஓரெழுத்து ஒரு மொழிகள் இடம் தருமாறு ஐந்து தொடர்கள் எழுதுக:
- தை – தை பிறந்தால் வழி பிறக்கும்
- மை – மாலா எழுதும் போது தாளில் மை சிந்தியது
- பா – பா நான்கு வகைப்படும்
- மா – முக்கனிகளுள் ஒன்று மா
- கை – மாரிக்கு விளையாடும் போது கை உடைந்தது.
சமச்சீர் கல்வி எட்டாம் வகுப்பு தமிழ்மொழி வாழ்த்து வினா விடைகள் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |