சூரசம்ஹாரம் வரலாறு | Soorasamharam Varalaru in Tamil
வாசகர்கள் அணைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஒரு அருமையான தகவல் ஒன்றினை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. அதாவது, சூரசம்ஹாரம் உருவான கதை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. நாம் அனைவருமே சூரசம்ஹாரம்பற்றி அறிந்து இருப்போம். ஆனால், அதனை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
சூரசம்ஹாரம் என்றால் என்ன.?
சூரசம்ஹாரம் என்பது முருகப் பெருமான் சூரபத்மன் என்ற அரக்கனை அழித்த நிகழ்வாகும். முருகன் தன வேலினை கொண்டு சூரபத்மனை அளித்த நிகழ்வை தான் சூரசம்ஹாரம் விழாவாக கொண்டாடி வருகிறோம். சூரசம்ஹாரம் நினைவாக அனைத்து முருகன் கோவில்களிலும் சூரசம்ஹாரம் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கந்த சஷ்டி விரதத்தின் கடைசி நாள் சூரசம்ஹாரம் நாளாக கொண்டாடப்படுகிறது.
சூரசம்ஹாரம் வரலாற்று கதை:
படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு மகன்கள் இருந்தார்கள். இவர்களில் தட்சன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து, சிவனிடம் இருந்து பல வரங்களை பெற்றான். அதுமட்டுமில்லாமல், சிவபிரானுக்கே மாமனாராகியும் உள்ளான். அதன் பிறகு, அகந்தை காரணமாக சிவ பெருமானால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டார்.
(இந்த தட்சனே அடுத்த பிறவியில் சூரபத்மனாக பிறந்தான். தட்சனின் மகள் பார்வதி. பார்வதியின் மகன் முருகன். இதன் படி பார்த்தால் முருகனுக்கு சூரபத்மன் தாத்தா உறவு என்றும் கூறப்படுகிறது)
அடுத்து, பிரம்மாவின் மற்றொரு மகன் காசிபனும் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து பல வரங்களை பெற்றார். அதன் பிறகு, ஒரு நாள் அசுர குரு சுக்கிரன் ஏவப்பட்ட மாயை என்னும் பெண்ணின் அழகில் மயங்கி, தான் பெற்ற வரங்கள் அனைத்தையும் இழந்தான்.
கந்த சஷ்டி விரதம் எப்போது 2024 தெரியுமா.?
காசியப்ப முனிவருக்கும் மாயை என்ற பெண்ணுக்கும் மனிதத் தலையுடைய சூரபத்மனும், சிங்கமுகமுடைய சிங்கனும்,யானை முகமுடைய தாரகனும், ஆட்டுத் தலையுடைய அஜமுகி என்ற நான்கு பேர் பிறந்தார்கள். காசியப்பர் தன் பிள்ளைகளிடம், சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து வரங்களை பெற்று கொள்ளுங்கள் என்று கூறினார்.
அதேபோல், அப்பிள்ளைகளும் சிவபெருமானிடம் இருந்து பல்வேறு வரங்களை பெற்றார்கள். இவர்களில், சூரபத்மன் கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக கேட்டு பெற்றான். அதுமட்டுமில்லாமல், சாகா வரம் வேண்டும் என்றும் கேட்டான். அதற்கு சிவபெருமான் பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்று கூறினார். அதன் பிறகு, எந்த வகையில் உனக்கு அழிவு வர வேண்டும் என்று கேட்டார். அதற்கு, சூரபத்மன் புத்திசாலித்தனமாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் எனக்கு அழிவு வர வேண்டும் என்று கூறினான். அந்த வரத்தினை சிவபெருமான் கொடுத்தார்.
வரத்தினை பெற்ற ஆணவத்தில் இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும், உயிர்களையும் துன்புறுத்தி சிறையில் அடைத்தான். இந்திரனும் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து விட்டார். சூரபத்மன் செய்கின்ற கொடுமைகளை தாங்கமுடியாமல், தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களை காக்குமாறு முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது ஆறு நெற்றிக் கண்களைத் திறந்து, அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளை வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் உள்ள தாமரை இலைகளில் இட்டார். அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருவெடுத்தன. இந்த ஆறு குழந்தைங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களை குறிக்கிறது. ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் மூலம் வளர்க்கப்பட்டார்கள்.
பிரணவ சொரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன், படைக்கும் கடவுள் கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடங்குவர். மேலும் முருகப்பெருமான் சிவாக்னியில் தோன்றியவராதலால் ஆறுமுகமே சிவம்-சிவமே ஆறுமுகம் என்பதுண்டு.
இந்த ஆறு குழந்தைகளையும், பார்வதி தேவி கட்டி அணைக்க ஒரு உருவமாக வடிவம் கொண்டு, ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப்பெருமானாகத் தோன்றினர். இத்திருவுருவைப் பெற்றதால் ஆறுமுகசுவாமி என்ற பெயர் முருகப் பெருமானுக்கு தோன்றியது.
அதன் பிறகு, முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார். திருக்கரத்தில் வேலேந்திக் கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே! நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத்தேவையில்லை. அஞ்சும் முகம் தோன்றும் போது இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள். உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள்செய்வது என் வேலை, என்றார்.
அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான். போரின் முடிவில் சூரபத்மன் மாமரமாக மாறி நின்றான். முருகப்பெருமான் தன் தாய் உமாதேவியிடம் ஆசி பெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒரு பாதியை ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றினார். மயிலை வாகனமாகவும், சேவலை கொடிச்சின்னமாகவும் ஆக்கினார்.
சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பினான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச் செந்தூர் கோவில்.சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான்.
எனவே, சூரசம்ஹாரம் விழா ஆனது மறுநாள் முருகன் தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.
முருக பெருமானுக்கு உகந்த நாள் எதுன்னு தெரியுமா..?
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |