கோளறு பதிகம் வரிகள் | Kolaru Pathigam Lyrics | கோளறு பதிகம் பாடல் வரிகள் PDF
Kolaru Pathigam Lyrics in Tamil:- வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். கோளறு பதிகம் என்பது நவகிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கவும், ஆயுள் பலம் பெருக்கவும் பாராயணம் செய்ய வேண்டிய பதிகமாகும். கோளறு பதிகம் மொத்தம் 11 பாடல்களை கொண்டுள்ளது. கோளறு பதிகம் 11 பாடல்களுக்கும் ஒரு பலன் உள்ளது. தினந்தோறும் நாம் கோளறு பதிகம் உச்சரிப்பதன் மூலம் நற்பலன்களை பெற முடியும். ஆகையால், நமக்கு இருக்கும் எல்லாவிதமான துன்பங்களும் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி உண்டாக தினந்தோறும் கோளறு பதிகம் உச்சரிக்க வேண்டும்.
கோளறு பதிகம் என்றால் என்ன | கோளறு பதிகம் தமிழ்
பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகளாக உள்ளன. இவற்றுள் இரண்டாம் திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்று கோளறு பதிகம் என்று அழைக்கப்படுகிறது.
ஜோதிடம்:
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை சனி பெயர்ச்சி நடைபெறுகிறது. சனி கிரகத்தின் அதிதேவதை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதை பெயர்ச்சி என்று ஜோதிட சாஸ்த்திரங்களில் கூறப்படுகிறது. இந்த பெயர்ச்சியின் போது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் நன்மை மற்றும் தீமைகள் ஏற்படும்.
இந்த பெயர்ச்சிகளின் போது ஏற்படும் துன்பங்களில் இருந்து விலக கிரக வழிபாட்டை தவிர்த்து மற்ற அனைத்து காரியங்களையும் செய்வோம். அதாவது நமது இஷ்ட தெய்வங்களை வழிபடுவது, நவகிரகங்களுக்கு விளக்கு ஏற்றுவது, விதவிதமான கற்களை மோதிரம் செய்து போட்டுக்கொள்வோம். இவையெல்லாம் செய்தால் கண்டிப்பாக இந்த கிரக தோஷத்தில் இருந்து தப்பி செல்ல முடியாது.
இந்த கிரக தோஷங்களில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், திருஞானசம்பந்தர் பாடியுள்ள சக்தி வாய்ந்த கோளறு பதிகத்தை தினமும் பாராயணம் புரிவதன் மூலம் கர்ம வினையின் வேகத்தை நிச்சயமாக குறைத்துக் கொள்ள முடியும். சரி வாங்க இப்பொழுது திருஞான சம்பந்தர் பாடியுள்ள கோளறு பதிகம் பாடல் வரிகளை இப்பொழுது நாம் படித்தறியலாம்.
கோளறு பதிகம் பாடல் வரிகள் | வேயுறு தோளிபங்கன் பாடல் வரிகள்
கோளறு பதிகம் முதல் பாடல் 1
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்
ளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
பாடல் பொருள்:
இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு ஒன்பது கிரகங்களும் குற்றமற்ற நன்மையே புரியும். இடர்கள் ஏதும் புரியாது.
கோளறு பதிகம் இரண்டாம் பாடல் 2
என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
எருதேறி யேழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
பாடல் பொருள்:
அனைத்து நட்சத்திரங்களும், நாள்களும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் புரியாது. மாறாக நன்மையே விளைவிக்கும்.
கோளறு பதிகம் மூன்றாம் பாடல் 3
உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வ மான பலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
பாடல் பொருள்:
திருமகள், துர்க்கை, அஷ்ட திக்குப் பாலகர்கள், பூமியை இயக்கும் அதி தேவதை ஆகியோர் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். குற்றமற்ற செல்வமும் வந்து எய்தும்.
கோளறு பதிகம் நான்காம் பாடல் 4
மதிநுதல் மங்கையோடு வடபாலி ருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடுநோய்க ளான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
பாடல் பொருள்:
சினம் மிகுந்த கூற்றுவன், அக்கினி, காலனின் தூதுவர்கள் ஆகியோர் இடர் புரியாமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். கொடிய நோய்கள் வருத்தாது.
கோளறு பதிகம் ஐந்தாவது பாடல் 5
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூத மவையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
பாடல் பொருள்:
கொடிய சினத்தை உடைய அரக்கர்களாலும், பஞ்ச பூதங்களாலும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும். இல்லாமையாகிய வறுமை வந்து எய்தாது.
கோளறு பதிகம் பாடல் வரிகள் 6
வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்
மடவாள் தனோடு முடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
பாடல் பொருள்:
சிங்கம், புலி, கொல்லும் தன்மை கொண்ட யானை, பன்றி, கொடிய நாகம், கரடி ஆகியவைகளால் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும்.
Kolaru Pathigam Lyrics in Tamil (ஏழாம் பாடல்)
செப்பிள முலைநன்மங்கை யொரு பாகமாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
வினையாக வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
பாடல் பொருள்:
வெப்பம், குளிர், வாதம்; பித்தம் முதலான நாடிகள் ஆகிவைகளும் தம் இயல்பில் இருந்து நீங்காமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே விளைவிக்கும்.
கோளறு பதிகம் பாடல் வரிகள் (எட்டாம் பாடல்)
வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வான்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
பாடல் பொருள்:
கயிலை மலையை பெயர்க்க முற்பட்ட இராவணனை பெரும் இடர் எய்தியது. அது போன்று இடர்கள் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நேராது. ஆழ்கடலும் நன்மையே செய்யும்.
Kolaru Pathigam Tamil Lyrics (ஒன்பதாம் பாடல்)
பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும்மாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
பாடல் பொருள்:
நான்முகன், ஸ்ரீமன் நாராயண மூர்த்தி, மறைகள், தேவர்கள் ஆகியோர் அனைவரும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். மேலும் வரும் காலங்கள் ஆன பலவும், கடலும், மேரு மலையும் நன்மையே விளைவிக்கும்.
கோளறு பதிகம் பாடல் வரிகள் (பத்தாம் பாடல்)
கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும்நாகம் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரோ டமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
பாடல் பொருள்:
புத்தரையும் சமணரையும் வாதில் வெல்லும் நிலையான பெற்றியை உடையது சிவபெருமானின் திருநீறு. இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் நேராத வண்ணம் காத்து நிற்கும் பெருமானின் திருநீறு.
Kolaru Pathigam Tamil Lyrics (பதினோறாம் பாடல்)
தேனமர் பொழில் கொள்ஆலை விளைசெந்நெல்துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரம்மா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.
பாடல் பொருள்:
இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நாள்களும், கோள்களும், நட்சத்திரங்களும் நன்மையே புரியும். இது நம் ஆணை.
கோளறு பதிகம் பாடலை பாடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
- கோளறு பதிகம் பாடுபவர்களுக்கு நவகிரகங்களோ அல்லது பிற கிரகங்களோ தண்டனை விதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு இடையூறு ஏற்படாது.
- கோளறு பதிகம் தினமும் படிப்பதால் முன்வினைப் பயனால் வரும் துன்பங்களின் வீர்யம் குறையும். மேலும், ஏழரைசனி ,ராகு, கேது, அஷ்டமச் சனி இவைகளின் துன்பங்களை சுலபமாக எடுத்துக்கொள்ளக்கூடிய மனோபலம் பெருகும்.
- ஒருவருக்கு கிரக தோஷம், கிரக நிலை சரியில்லதாக போது தினந்தோறும் இந்த பாடல்களை பாடினால் கிரக தோஷத்திலிருந்து விடுபட முடியும் என்பதே இப்பாடலின் மிகப்பெரிய அற்புதம் ஆகும்.
- கோளறு பதிகம் பாடினாலோ அல்லது பிறர் கூற கேட்டாலோ நமக்கு இருக்கும் தீராத கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.
- எவர் ஒருவர் தினந்தோறும் கோளறு பதிகம் பாடலை பாடி வருகிறரோ அவருக்கு ஆயுள் பலம் பெறும். மேலும், வாழ்வில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கும்.
- திருஞானசம்பந்தர் அருளியுள்ள சக்தி வாய்ந்த கோளறு பதிகத்தை தினமும் பாராயணம் புரிவதன் மூலம் கர்ம வினையின் வேகம் குறையும்.
- முக்கியமாக, புரட்டாசி மாத பிரதோஷ நாட்களில் இந்த சக்தி வாய்ந்த கோளறு பதிகத்தை உச்சரிப்பதன மூலம் இன்னும் அதிகமான நற்பலன்களை பெறமுடியும்.
Kolaru Pathigam Lyrics in Tamil PDF
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |










