இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி அனைத்திற்கும் அருமையான வெள்ளை குருமா செய்வது எப்படி? – Kurma Recipe in Tamil
White Kurma Recipe in Tamil – ஹாய் பிரண்ட்ஸ் இன்னைக்கி நாம ஒரு அருமையான குருமா ரெசிபியை பற்றி தான் பார்க்க போறோம்.. சில நேரங்களில் நம்ம வீட்டுல சமைப்பதற்கு காய்கறிகள் எதுவும் இருக்காது. அந்த சமயத்துல இந்த வெள்ளை குருமாவை வெறும் 10 நிமிடத்தில் மிக எளிதாக செய்துவிடலாம். இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்ற உணவுகளுக்கு மிகவும் சுவையாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடியதாக இருக்கும். சரி வாங்க வெள்ளை குருமா எப்படி செய்யணும், இதற்கு என்ன பொருட்கள் எல்லாம் தேவைப்படும் போன்ற விவரங்களை நாம் இப்பொழுது பார்க்கலாம்..
வெள்ளை குருமா வைப்பது எப்படி? – White Kurma Recipe in Tamil
தேவையான பொருட்கள்:
- சமையல் எண்ணெய் – இரண்டு ஸ்பூன்
- பெரிய வெங்காயம் – இரண்டு (ஒன்று இரண்டாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் – மூன்று
- சோம்பு – ஒன்று ஸ்பூன்
- பூண்டு – 5-6 பல்
- இஞ்சி – சிறிய துண்டு
- பொட்டுக்கடலை – மூன்று ஸ்பூன்
- முந்திரி பருப்பு – 5-6
- தேங்காய் துருவல் – 1/4 கப்
தாளிப்பதற்கு:
- எண்ணெய் – இரண்டு ஸ்பூன்
- சோம்பு – 1/2 ஸ்பூன்
- கிராம்பு – மூன்று
- பட்டை – ஒன்று
- பிரிஞ்சி இலை – ஒன்று
- பெரிய வெங்காயம் – ஒன்று (பொடிதாக நறுக்கியது)
- தேவையான அளவு – உப்பு
- நாட்டு தக்காளி – இரண்டு (நறுக்கியது)
வெள்ளை குருமா செய்வது எப்படி? – White Kurma Recipe in Tamil
ஸ்டேப்: 1
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வையுங்கள்.. பின் அவற்றில் இரண்டு ஸ்பூன் சமையல் எண்ணெய்யை சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் ஒன்று இரண்டாக நறுக்கிய வெங்காயத்தை நன்றாக வதக்குங்கள்.
ஸ்டேப்: 2
வெங்காயம் நன்கு வதங்கியதும் உங்கள் காரத்திற்கு ஏற்றது போல் பச்சை மிளகாயை சேர்த்து கொள்ளுங்கள். நான் மூன்று பச்சை மிளகாயை சேர்த்து வதக்குகிறேன்.
ஸ்டேப்: 3
பச்சை மிளகையும் நன்கு வதங்கிய பிறகு ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து வதக்குங்கள். சோம்பின் பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கிக்கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 4
பின்பு ஆறு பற்கள் பூண்டு மற்றும் ஒரு சிறிய அளவிலான இஞ்சி துண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 5
பின்பு மூன்று ஸ்பூன் பொட்டுக்கடலையை சேர்த்து வதக்குங்கள். பொட்டுக்கடலையை வதக்கிய பிறகு முந்திரி பருப்புகள் மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து வதக்க வேண்டும். அவ்வளவு தான் வதக்கிய இவற்றை நன்கு ஆறவைத்து மிக்ஷில் நன்றாக மைபோல் அரைத்து கொள்ளுங்கள். இப்பொழுது வெள்ளை குருமா செய்வதற்கு மசாலா தயார் செய்து விட்டோம். அடுத்ததாக வெள்ளை குருமா எப்படி வைக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
ஸ்டேப்: 6
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக்கொள்ளுங்கள். எண்ணெய் சூடேறியதும் சோம்பு 1/2 ஸ்பூன், மூன்று கிராம்பு, பட்டை ஒன்று, பட்டை ஒன்று, பிரிஞ்சி இலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 7
பின்பு அவற்றில் பொடிக்க நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள்.
ஸ்டேப்: 8
வெங்காயம் வதங்கியதும் தேவையான அளவு உப்பு மற்றும் நறுக்கிய நாட்டு தக்காளி இரண்டு ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் வதக்குங்கள்.
ஸ்டேப்: 9
தக்காளி ஓரளவு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை இவற்றில் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் அதாவது மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பை மிதமான சூட்டில் வைத்து குருமாவை 5 நிமிடம் வேக வைக்கவும்.
ஸ்டேப்: 10
5 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் செய்து விட்டு சிறிதளவு கொத்தமல்லி இலைகளை மலை சாரல் போல் தூவி விடுங்கள் அவ்வளவுதான். வெள்ளை குருமா சுடசுட தயார்.
இவற்றை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்ற உணவுகளுக்கு தொட்டுக்கொள்வதற்கு மிகவும் அருமையாக இருக்கும். காரம் அதிகமாக இந்த குருமாவில் இருக்காது என்பதினால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் அளவிற்கு இந்த வெள்ளை குருமா இருக்கும். ஒரு முறை உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்..
சிக்கன் மசாலா தூள் & சிக்கன் மசாலா செய்முறை
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |