Things a Voter Should Think About Before Selecting a Candidate
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஒரு வாக்காளர் ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கு முன் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. பொதுவாக, ஓட்டு போடும்போது, பலபேர் ஏனோதானோ என்று ஓட்டு போடுகிறார்கள். ஒரு சிலர் காலம் காலமாக போட்டவர்களுக்கே ஓட்டு போட்டு வருகிறார்கள். இதுபோன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் ஓட்டு போடுகிறார்கள். ஆனால், வாக்காளர்களாகிய நாம் ஓட்டு போட்டு ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் போது, சில விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். அதனை பற்றி இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள், படித்து தெரிந்து கொள்ளலாம்.
வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கு முன் சிந்திக்க வேண்டிய விஷயங்கள்:
- உங்கள் முன் நிற்கும் வேட்பாளர்கள் என்னென்ன பின்னணியில் நிற்கிறார்கள்.அவர்களின் அரசியல் பொருளாதார பின்புலம் மற்றும் குடும்ப பின்னணி என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
- உங்கள் முன் நிற்கும் வேட்பாளர்களை, நிறுத்தி இருக்கிற கட்சிக்கு ஏற்கனவே நீங்கள் வாக்கு செலுத்தி அவர்கள் வென்று இருந்தால், கொடுத்த வாக்குறுதிகளை ஏற்கனவே அவர்கள் நிறைவேற்றி இருக்கிறார்களா என்பதை பற்றி யோசியுங்கள்.
- வேட்பாளர்களைப் பற்றி இணையதளங்களில், சமூக வலைதளங்களில் தேடுங்கள். உங்கள் உள்ளங்கையில் உலகம் இருக்கின்ற காலம் இது. அதனால், அவர்களைப் பற்றிய விமர்சனங்கள், அவர்களைப் பற்றிய நேர்மறை கருத்துக்கள் என அனைத்தையும் தேடிப்பாருங்கள். நீங்கள் வாக்கு செலுத்த இருக்கும் வேட்பாளர் இதுவரை ஏதாவது போராட்டக் களத்திற்கு சென்று இருக்கிறாரா, மக்களோடு இணைந்து போராட தயாராக இருக்கிறாரா என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
- உங்கள் வேட்பாளரின் குடும்ப கல்விப் பின்புலத்தைப் பற்றி ஆய்வு செய்யுங்கள்.அரசியல் குடும்பமாக இருந்தால் அவர்களது மூதாதையர்கள் செய்த அரசியல் பணிகளை பற்றி யோசித்துப் பாருங்கள்.
- பாராளுமன்றம் செல்வது என்பது படுத்துத் தூங்க அல்ல. மேசையை தட்டி வருவதற்கும் அல்ல. எழுந்துப் பேச வேண்டும். நம் பிரச்சினைகளைப் பற்றி, நமது உரிமைகளைப் பற்றி அங்கே உரத்தக் குரலில் பேசுவதற்கு நாம் வாக்கு செலுத்துகின்ற வேட்பாளர் தகுதியானவராக இருக்க வேண்டும்.
- உங்களது வேட்பாளரை முன்னிறுத்தும் அரசியல் கட்சியின் கடந்த கால வரலாறுகளை சற்று யோசித்துப் பாருங்கள். கடந்த 10 ஆண்டுகளில் உங்கள் வேட்பாளரின்/ அவர் சார்ந்து இருக்கும் அரசியல் கட்சியின் நிலைப்பாடுகள் நாட்டுக்கும், உங்கள் பகுதிக்கும் ஏதாவது நன்மை செய்திருக்கின்றனவா என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
- வாக்குக்கு காசு கொடுக்கும் வேட்பாளருக்கு ஒருபோதும் வாக்களிக்காதீர்கள். அவர்கள் அரசியலை தொழிலாக மாற்றியவர்கள்.இப்போது காசு கொடுப்பார்கள், பிறகு உங்கள் வாக்கினை வைத்து பெறப்போகும் பதவியை கொண்டு பணம் சம்பாதிப்பார்கள்.இழப்பு உங்களுக்கே. அடுத்த ஐந்தாண்டுக்கு நாம் செலுத்திய வாக்கு தான் அவர்கள் பணம் சம்பாதிக்கின்ற வழி.
- சமகால பிரச்சனைகளான காவிரி நதி நீர்ச் சிக்கல், நீட் தேர்வு, கச்சத்தீவு மீட்பு, கனிம வளங்கள் கொள்ளை, ஆற்று மணல் அபகரிப்பு, சாதி மத முரண்கள், மருத்துவக் கழிவு, பிற மொழிகள் திணிப்பு, போன்ற முக்கிய பிரச்சினைகளில் நீங்கள் வாக்கு செலுத்த போகும் வேட்பாளரின் அரசியல் கட்சி கொண்டிருக்கின்ற நிலைப்பாடுகளை சிந்தித்துப் பாருங்கள்.அதற்கு அவர்கள் போராடிய போராட்டக் களங்களை பற்றி கணக்கெடுங்கள்.
- பெண்களுக்கான இடத்தை, மதிப்பை, அங்கீகாரத்தை தந்து பாலியல் சமத்துவத்தை நிலை நாட்டுகிற கட்சியை சார்ந்தவராக உங்களது வேட்பாளர் அமையட்டும்.
- இந்தக் கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என சொல்ல நம் குடும்பத்தில் உள்ளவர்களுக்குஎந்த வித உரிமையும் இல்லை. ஓட்டு என்பது தனி உரிமை. அது தனிமனிதனின் சிந்தனையால் அமைய வேண்டும். நீங்களே சரியானவற்றை தேர்ந்தெடுங்கள்.
- பாரம்பரியமாக நாம் இந்தக் கட்சிக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்கின்ற பிற்போக்குத்தனங்களை எட்டி உதையுங்கள். ஏனெனில் ஒவ்வொரு நாளும் மாறும் உலகத்தில் அரசியல் கட்சிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. கொண்ட நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்ற கட்சிக்கு தான் நமது வாக்கு அமைய வேண்டும்.
- கட்சிகளின் கொள்கைகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள். கொண்ட கொள்கைகளில் சமரசம் இல்லாமல் தடுமாற்றம் இல்லாமல் தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பவர்களை கொஞ்சம் கவனியுங்கள். எந்தவித இழப்பு வந்தாலும், சமரசம் செய்து கொள்ளாமல் களத்திலே உறுதியாக நிற்பவர்களுக்கு உங்களது வாக்கு அமையட்டும்.
- எளியவர்களுக்கு எப்போதும் தோள் கொடுங்கள். அது ஜனநாயகத்திற்கு நல்லது. காசு இருந்தால் தான் அரசியல் செய்ய முடியும் என்பது மக்களாட்சி முறைமைக்கு எதிரானது. பணம் இருப்பவர்கள் மட்டுமே பதவிக்கு வர முடியும் என்பது மிக மிகக் கேடானது.
- உங்களது வேட்பாளர் நீங்கள் எளிதில் அணுகக் கூடியவராக, நீங்கள் கேள்வி கேட்க முடிகிற உயரத்தில் இருக்கக்கூடியவராக இருத்தல் வேண்டும். வசதி படைத்தவர்களுக்கும், அதிகாரம் கொண்டவர்களுக்கும் வாக்களித்துவிட்டு பிறகு காணவில்லையே என புலம்புவது தேவையற்றது.
- ஒருபோதும் சாதிக்காகவும், மதத்திற்காகவும் வாக்களிக்காதீர்கள். சாதியும் மதமும் எதற்கும் உதவாதவை. நம்மைப் பிரிக்க ஏற்பட்டவை. சாதி மதத்தால் செத்தவன் பல கோடி பேர். வாழ்பவர் சில நூறு பேர். சாதி மதம் எதற்கும் உதவாதது. சாதியை, மதத்தை தாண்டி சூழலியல் சார்ந்து, அரசியல் சார்ந்து உரையாடுபவர்களுக்கு சிந்திப்பவர்களுக்கு, இயங்குபவர்களுக்கு உங்களது வாக்கு அமையட்டும்.
தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |