சிவனின் மந்திரமாவது நீறு பாடல் வரிகள்..!

Advertisement

Manthiramavathu Neeru Lyrics in Tamil

வணக்கம் ஆன்மீக நண்பர்களே..! இன்றைய பதிவில் சிவனின் மந்திரமாவது நீறு பாடலை பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். அந்த பாடலை சொல்லும் போது தீராத நோய்களும் தீர்ந்து போகிவிடும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. உஷ்ணத்தால் வரக்கூடிய அம்மை, வெப்ப நோய்கள், காய்ச்சல் இது போன்ற நோய்களை எளிதில் போக்குவதற்கு சிவபெருமானை நினைத்து திருஞான சம்மந்தர் இந்த பாடலை பாடியுள்ளார்.  திருநீற்று பதிகத்தில் இடம் பெற்றுள்ள சிவனின் இந்த பாடல் வரிகளை நாம் உச்சரிக்கும் போது நம்மை அறியாமலே நோய்கள் மறைந்து விடும் என்றும் புது தன்னம்பிக்கை உண்டாகும் என்றும் ஒரு நம்பிக்கை. அப்படிப்பட்ட அந்த சிவனின் மந்திரமாவது நீறு பாடலை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ ஓம் நம சிவாய மந்திரம் மற்றும் சிவனின் 108 போற்றி..!

மந்திரமாவது நீறு சிவன் பாடல்:

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே!

வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே!

Sivan Manthiram in Tamil:

முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே!

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே!

சிவன் மந்திரம் வரிகள்:

பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே!

அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே!

சிவன் பாடல் வரிகள்:

எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே!

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே!

Sivan Manthiram in Tamil:

மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே!

மந்திரமாவது நீறு:

குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூட
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே!

ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே!!!

பாடலின் அர்த்தம்:

திருஆலவாயில் எழுந்தருளிய சிவபிரான், சிவந்த பவளம் போன்ற கனிந்த உதடுகளையுடைய பரமஉமைபங்கன். அவரது திருநீறு, மந்திர சக்தி போன்று நினைப்பவர்களை காத்து அருள் புரியும். வானவர்களால் மேனியில் அணியப்படும் இத்திருநீறு அழகு கொடுக்கும், அனைத்து நூல்களாலும் போற்றப்படும், ஆகமங்களால் விளக்கப்படும், சிவமய உணர்வில் நிலைக்கும்.

குளிர்ந்த நீரால் நிரம்பிய வயல்களை சூழ்ந்த திருஆலவாயில் எழுந்தருளிய சிவபெருமானின் திருநீறு, வேதங்களில் போற்றப்படுவது. அது தீவினைகளை நீக்கி, சிவஞானத்தை வழங்கி, அறியாமையை அகற்றி, புகழின் சிகரமாக விளங்கும்.

திருஆலவாயான் திருநீறு, முக்தியை வழங்கும், முனிவர்களால் விரும்பி அணியப்படும், நிலையானது, பக்தர்களால் போற்றப்படும். இறைவனிடம் பக்தியை வளர்க்கும், வாழ்த்தத் தக்கது, எண்வகைச் சித்திகளை அளிக்கக்கூடியது.

திருஆலவாயான் திருநீறு கண்களுக்கு இனிமை அளிக்கும், அழகை தரும், அணிந்தவர்களுக்கு பெருமை சேர்க்கும், மரணத்தைத் தடுக்கும், அறிவை வழங்கும், உயர்வை அளிக்கும்.

இத்திருநீறு பூசிக்க உகந்தது, புண்ணியத்தை அதிகரிக்கும், பேசுவதற்கும் இனிமையானது. பெரிய முனிவர்கள் துறவை அடைய உதவும், பரமஆனந்த நிலையைத் தரும், உலகத்தாரால் போற்றப்படும்.

அழகிய மாளிகைகள் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறு, செல்வத்தை வழங்கும், துன்பங்களை நீக்கும், மனவேதனையை குறைக்கும், துறவியருக்கு ஆனந்தம் அளிக்கும், அனைவருக்கும் ஏற்றது, புண்ணியரால் பூசிக்கப்படும்.

சூலத்தை ஏந்திய ஆலவாயான் திருநீறு, திரிபுரங்களை எரிக்கச் செய்த சக்தியைக் கொண்டது. இம்மை, மறுமை இன்பம் தரக்கூடியது, மற்றவர்களோடு நல்லுறவு வளர்க்கும், செல்வமாக விளங்கும், தூய்மையை வழங்கும்.

பாம்புகளை அலங்காரமாக அணிந்த திருஆலவாயான் திருநீறு, இராவணன் பூசித்து பலனடைந்தது, நல்லவர்களால் விரும்பப்படும், பராசக்தியின் வடிவமாக விளங்கும், பாவங்களை நீக்கும், தத்துவ அறிவை வெளிப்படுத்தும், மெய்யுணர்வை அளிக்கும்.

நஞ்சை உட்கொண்ட நீலக்கண்டனின் திருநீறு, திருமாலும் பிரமனும் உணர முடியாத ஆன்மீக நுணுக்கம் கொண்டது. வானுலகத்து தேவர்கள் பக்தியுடன் பூசிக்கின்றனர், பிறவித் துன்பத்திலிருந்து விடுவித்து நித்திய ஆனந்தம் அளிக்கும்.

மேலுலகில் வாழும் தெய்வங்கள் வழிபடும் திருஆலவாயான் திருநீறு, சமணர்களும் சாக்கியர்களும் அதிசயிக்கக் கூடியது, தியானத்திற்கு ஏற்றது, எட்டுத் திசைகளிலும் பரந்து புகழப்படும், உண்மையை உணர்ந்த மகான்கள் போற்றும்.

வீரமும், வலிமையும் கொண்ட நந்தியின் மேல் ஆரோகணிக்கும் ஆலவாயான் திருநீறு, புகலியில் விளங்கும் ஞானசம்பந்த சுவாமிகள் பாண்டியன் அரசனின் உடலில் பற்றிய தீமையை நீக்க சாத்தியமான திருப்பதிகம் பாடிய பெருமை உடையது. இதனைப் பாராயணம் செய்யும் நல்லவர்களுக்கு இறையருள் நிலையானதாக இருக்கும்.

பாடலின் நன்மைகள்:

  • பாவங்களை நீக்க கூடியது.
  • அறிவுத்திறனை மேம்படுத்தும்.
  • உடல் அளவிலும் சரி மனதளவிலும் சரி நம்மை தூய்மைபடுத்தும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மேலும் செல்வத்தை அதிகரிக்கும்.
  • நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement