குடைமிளகாய் சாகுபடி முறை..!
மக்களின் உணவில் அவசிய தேவை தக்காளி, வெங்காயம் என்று கூறுவார்கள். அதேபோல் மிளகாய் வத்தல், குடைமிளகாய் போன்றவையும் அதிகம் பயன்படுகின்றன. இது பல நிறங்களில் காணப்படுகிறது. குறிப்பாக சிவப்பு, மஞ்சள், பச்சை, ஆரஞ்சு நிறங்களில் காணப்படுகிறது.
சரி வாங்க இயற்கை விவசாயத்தில் இன்று நாம் குடைமிளகாய் சாகுபடி முறையையும் அவற்றின் பயன்களையும் இவற்றில் காண்போம்.
மல்லிகை பூ சாகுபடி முறைகள்..! |
குடைமிளகாய் சாகுபடி – இரகங்கள்:
கே டீ பி எல் –19, பயிடாகி கட்டி ஆகிய இரகங்கள் குடைமிளகாய் சாகுபடிக்கு ஏற்றவை.
குடைமிளகாய் சாகுபடி – பருவ காலம்:
ஜூன் – ஜூலை மாதங்கள் குடைமிளகாய் சாகுபடி செய்ய சிறந்த பருவம் ஆகும்.
மண்:
நல்ல வடிகால் வசதியுடைய, உவர்ப்புத் தன்மை இல்லாத களிமண், குடைமிளகாய் சாகுபடிக்கு ஏற்றது. 6.5-7.0 வரை கார அமிலத் தன்மை கொண்ட மண்ணில் நன்கு வளரும்.
விதையளவு
ஒரு ஏக்கருக்கு 500 கிராம் விதைகள் வீதம் தேவைப்படும்.
குடைமிளகாய் சாகுபடி – விதை விதைத்தல்:
ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
நாற்றங்கால் தயாரித்தல்:
நாற்றங்கால் அமைக்க 7 மீ நீளம், 1.2 மீ அகலம் மற்றும் 15 செ.மீ உயரம் கொண்ட 10-12 படுக்கைகளை அமைக்க வேண்டும். விதைகளை 10 செ.மீ வரிசை இடைவெளியில் 0.5 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். 15-20 கிலோ நன்கு மட்கிய உரம் மற்றும் 500 கிராம் NPK உரத்தினை விதைத்த, 15-20 நாட்களில் ஒவ்வொரு படுக்கைக்கும் அளிக்க வேண்டும்.
குடைமிளகாய் சாகுபடி – நிலம் தயாரித்தல்:
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறைகள் நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவுக்கு முன் ஒரு ஏக்கருக்கு 15 டன் தொழுவுரம் அடி உரமாக இட்டு நன்கு உழவேண்டும். நடவு வயலில் 4 அடி அகலம் உடைய மேட்டுப் பாத்திகளை ஒரு அடி இடைவெளியில் அமைக்க வேண்டும். சொட்டு நீர் பாசனமாக இருந்தால் பக்கவாட்டுக் குழாய்கள் மேட்டுப்பாத்தியின் மத்தியில் இணையாகச் செல்லுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
சொட்டு நீர் பாசனம் – முழு விளக்கம்..! |
குடைமிளகாய் சாகுபடி – விதைத்தல்:
நடுவதற்கு முன் நடவு வயலில் நீர் பாய்ச்ச வேண்டும். 35 நாட்கள் வயதான செடிகளை 0.5 சதவீத சூடோமோனாஸ் புளோரசன்ஸ் கரைசலில் 30 நிமிடங்கள் நனைத்த பிறகு இரு வரிசை நடவு முறையில் 90 x 60 x 60 செ.மீ என்ற இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்:
நடும் பொழுது நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். அதன்பின் மூன்றாம் நாள் உயிர்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் மண்ணின் தன்மைக்கேற்ப பாசனம் செய்ய வேண்டும்.
உரங்கள்:
ஏக்கருக்கு 20 கிலோ தழைச் சத்து மற்றும் 20 கிலோ சாம்பல் சத்தினை நட்ட மூன்று வாரங்களுக்கு பிறகும், 40 கிலோ தழைச்சத்து மற்றும் 40 கிலோ சாம்பல் சத்தினை நட்ட ஆறு வாரங்களுக்கு பிறகும் மேலுரமாக இட வேண்டும்.
சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 0.5 சதவீதத்தை 15 நாட்கள் இடைவெளியில் இலைகளின் மீது தெளிக்க வேண்டும்.
வளர்ச்சி ஊக்கிகள்:
டிரையகாண்டனால் என்ற வளர்ச்சி ஊக்கியினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1.25 மி.லி என்ற அளவில் நடவு செய்த 15 மற்றும் 30ம் நாட்களில் தெளிக்க வேண்டும்.
செண்டு மல்லி பூ சாகுபடி முறை..! |
குடைமிளகாய் சாகுபடி – பயிர் பாதுகாப்பு முறை:
களை நிர்வாகம்:
நடவு செய்த 30 மற்றும் 60 நாட்களில் களையெடுத்து பராமரிக்க வேண்டும்.
பாதுகாப்பு முறை:
ஆந்தராக்னோஸ்:
ஆந்தராக்னோஸ் நோயை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் மேன்கோசெப் கலந்து தெளிக்க வேண்டும்.
காய் அழுகல் நோய்:
ஒரு லிட்டர் தண்ணீரில் 2.5 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடை கலந்து தெளிப்பதன் மூலம் காய் அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம்.
சாம்பல் நோய்:
0.3 சதவித, நனையும் கந்தகத்தை தெளிப்பதன் மூலம் சாம்பல் நோயை கட்டுப்படுத்தலாம்.
குடைமிளகாய் சாகுபடி – அறுவடை:
நன்கு வளர்ச்சி அடைந்த காய்களை நடவு செய்த 70ம் நாள் முதல் அறுவடை செய்யலாம். காய்களின் அளவைப் பொறுத்து தரம் பிரித்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும். சிறிய வளைந்த மற்றும் உருமாற்றமுள்ள காய்களைத் தனியாக பிரித்தெடுக்க வேண்டும்.
மகசூல்:
குடைமிளகாய் சாகுபடியில் ஏக்கரில் 25 – 35 டன் காய்கள் வரை மகசூல் கிடைக்கும்.
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Organic farming in tamil |