Black Hole in Tamil
அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! நமது பால்வெளி அண்டம் நிறைய மர்மங்களையும் ஆச்சரியங்களையும் தனக்குள் கொண்டுள்ளது. அந்த வகையில் விண்வெளியில் உள்ள ஒரு ஆச்சரியமான விஷயமான கருந்துளை (Black Hole) பற்றி உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் பரவாயில்லை. இந்த கருந்துளை எவ்வாறு உருவானது இதன் செயல்பாடு என்ன என்பதை பற்றியெல்லாம் இன்றைய பதிவில் விரிவாக காணலாம்.
Black Hole Meaning in Tamil:
கருங்குழி அல்லது கருந்துளை(Black Hole) என்பது அவற்றின் எல்லைக்குள் செல்லும் ஒளி உட்பட அனைத்து பொருட்களும் வெளியேற முடியாத அளவிற்கு தனக்குள் ஈர்த்துக்கொள்ளும் வலுவான ஈர்ப்பு சக்தியை கொண்டுள்ள அண்டவெளியின் ஒரு பகுதியாகும்.
மேலே குறிப்பிட்டுள்ள எல்லை என்பதை நிகழ்வெல்லை என்றும் கூறலாம். இந்த நிகழ்வெல்லைக்குள் செல்லக்கூடிய ஒளி அலைகள் கூடத் தப்பி வெளிவர முடியாது என்பதால் உள்ளே நடப்பவை எவற்றையுமே வெளியில் இருந்து அறிந்து கொள்ள முடியாது. இதனாலேயே இதனைக் கருங்குழி என்கின்றனர்.
புதன் கிரகம் பற்றிய மிகவும் சுவாரசியமான தகவல்கள்
கருங்குழி என்பது விண்வெளியில் உள்ள நட்சத்திரங்களின் பரிணாமத்தின் இறுதிக்கட்டம் என்றும் கூறப்படுகிறது. இதற்கென்று கனஅளவோ, மேற்பரப்போ கிடையாது.
இந்த கருங்குழிகளை காணமுடியாது என்றாலும் இதன் நிகழ்வெல்லைக்கு அருகில் உள்ள பொருட்களின் மீது இவை கொண்டுள்ள தாக்கங்கள் மூலம் அவற்றின் இருப்பிடம் பற்றி அறிந்துகொள்ள முடியும்.
உதாரணமாக சில சமயங்களில் ஒரு விண்மீன் தொகுதி கருங்குழியொன்றின் ஈர்ப்புக்கு உட்பட்டு அதன் மையத்தைச் சுற்றி வருவது உண்டு. அப்பொழுது அந்த விண்மீன்களில் இருந்து வரும் வெளிச்சத்தை வைத்தும் இந்த கருங்குழியை கண்டறிந்துகொள்ள முடிகிறது.
History of Black Holes in Tamil:
1783 ஆம் ஆண்டில் முதன் முதலில் வானியலாளரான ஜான் மிச்சல் (John Michell) என்பவர் ஒளியைக் கூடத் தப்பவிடாத அளவுக்கு வலுவான ஈர்ப்பு சக்தி கொண்ட பொருள் பற்றிய தனது கருத்தை முன்வைத்தார்.
அதன் பிறகு 1795 ஆம் ஆண்டில் பிரெஞ்சு இயற்பியலாளர் பியரே-சைமன் லாப்பிளாஸ் (Pierre-Simon Laplace) என்பவரும் கருங்குழி பற்றிய தனது கருத்தை வெளியிட்டார்.
கருங்குழி பற்றி தெளிவான விளக்கம் 1916 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டீன் முன்மொழிந்த பொதுச் சார்புக் கோட்பாட்டில் இருந்தே பெறப்பட்டது.
கருங்குழி கண்டிபிடிப்பாளர்களுக்கு நோபல் பரிசு:
கருங்குழி அல்லது கருந்துளைகள் தொடர்பான மிகச் சிறப்பான கோட்பாடுகளை உருவாக்கியதற்காக பிரிட்டனைச் சேர்ந்த ரோஜர் பென்ரோஸ் என்பவருக்கும், நமது சூரியக் குடும்பம் இருக்கும் பால்வெளி மண்டலத்தின் நடுவே இருப்பதும் ஒரு கருந்துளைதான் என்பதை உறுதிப்படுத்திய அமெரிக்காவின் ஆண்ட்ரியா கெஸ்ஸுக்கும், ஜெர்மனியின் ரெய்ன்ஹார்டு ஜென்ஸலுக்கும் 2020 ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |