தில்லையாடி வள்ளியம்மை
பெண்களும் சலித்தவர்கள் அல்ல என்பதனை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட மங்கையர்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். அந்த வகையில் வேலுநாச்சியார், ராணி லட்சுமி பாய் போன்ற பெண்கள் இந்தியாவினுள் விடுதலைக்காக போராட, நாடு கடந்தும் இந்தியர்களுக்காக போராடிய பெண்களுள் மிகவும் முதன்மையானவராக தில்லையடி வள்ளியம்மை காணப்படுகிறார்.
தில்லையாடி வள்ளியம்மை வாழ்க்கை வரலாறு:
வள்ளியம்மையின் இளமைக்காலம்:
தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பார்க் நகரில் 1898ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் முனுசாமி முதலியார் மற்றும் மங்களத்தம்மாள் ஆவர். இவர்களது பூர்வீகம் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி என்ற கிராமம். நெசவுத்தொழிலாளியான முனுசாமி இந்தியாவில் British ஆட்சி நடந்து கொண்டிருந்த போது தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று அங்கு ஜோகானஸ்பேர்க் நகரில் ஒரு சிறிய வணிகத்தைத் தொடங்கினார். அங்கு தான் வள்ளியம்மை பிறந்தார்.
அறப்போராட்டத்தில் வள்ளியம்மை:
தென்னாப்பிரிக்காவில், கிறித்தவ தேவாலயங்களில் நடந்த திருமணங்கள் மட்டும் தான் செல்லும் என்று அப்போதைய அரசு அறிவித்தது. அதனை அப்போது தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் தலைமையில் அங்கிருந்த இந்தியர்கள் போராட்டம் நடத்தினர்.
சிறை வாழ்க்கையும் வள்ளியம்மையும் :
அந்த போராட்டத்தில் காந்தியின் உரிமை முழக்கத்தினால் கவரப்பட்ட வள்ளியம்மை, சிறுவயதிலேயே போராட்டத்தில் முனைப்புடன் ஈடுபட்டார். இதன் விளைவாக தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களுக்கு தென்னாப்பிரிக்க அரசால் விதிக்கப்பட்ட வரியை எதிர்த்து அறவழியில் போராடினர். அவற்றில் கலந்துகொண்ட வள்ளியம்மை 1913 ஆம் ஆண்டு வால்க்ஸ்ரஸ்ட் எனும் இடத்தில் கைது செய்யப்பட்டார். தென்னாபிரிக்க உயர் நீதிமன்றம் வள்ளியம்மைக்கு 3 மாத கால கடும் சிறைக்காவல் விதித்தது. அதன் விளைவாக டிசம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு கல்லும், மண்ணும் கலந்த உணவு வகைகளே வழங்கப்பட்டன. இதனால் சிறையில் இருந்த வள்ளியம்மைக்கு உடல் நலக்குறை ஏற்பட்டது, அதனால் அவரை விடுதலை செய்த போதும் அவர்களின் கோரிக்கை நிறைவேறாததால் வெளியே வர மறுத்தார். பின்னர் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரி நீக்கப்பட்ட பின்பே விடுதலையை ஏற்று வள்ளியம்மை உயிருக்கு போராடிய நிலைமையிலேயே சிறையில் இருந்து வள்ளியம்மை வெளியேறினார். சிறையில் இருந்து விடுதலை பெற்ற சில நாட்களிலே அதாவது 1914 பிப்ரவரி 22-ல் உயிர்துறந்தார்.
தில்லையாடி வள்ளியம்மை பற்றிய காந்தியடிகளின் கருத்து:
காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராக பணியாற்றிய நேரத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல்வேறு அறப்போராட்டங்களில் ஈடுபட்டார். அப்போராட்டங்களில் முனைப்பாக செயல்பட்ட சிறுமியான தில்லையாடி வள்ளியம்மை கண்ட காந்தியடிகள், அவரை பற்றி கூறும் போது “பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் தியாகம் செய்து வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை அவர்கள் தாம் எனக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்” மேலும் இளம் வயதிலேயே இந்தியர்களின் உரிமைகளுக்காக போராடி உயிர் துறந்த வள்ளியம்மையின் இறப்பானது, தன் சகோதரியின் இழப்பை விட மிகவும் வருத்தத்துக்குரியதாகும் என்றும், வள்ளியம்மையின் பெயர் தென்னாப்பிரிக்கா வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் எனவும் தென்னாபிரிக்கா சத்தியக்கிரகம் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அன்னிய நாட்டில் இந்தியர்களுக்காக போராடிய வள்ளியம்மை அவர்கள், 1914 ஆம் ஆண்டு கடும் காய்ச்சலினால் தன்னுடைய 16 வது வயதில் மரணம் எய்தினார். தமிழ்நாடு அரசு தில்லையாடி வள்ளியம்மையின் வீரத்தை போற்றும் வகையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தில்லையாடியில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது. காந்தியடிகள் தில்லையாடிக்கு வருகைபுரிந்ததான் நினைவாக காந்தி நினைவுத் தூண் மற்றும் அதன் எதிரில் ‘தில்லையாடி வள்ளியம்மை நினைவுமண்டபம்’ கட்டப்பட்டுள்ளது.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கட்டுரை
அரசு வழங்கிய நினைவு சின்னங்கள்:
இங்கு தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் அம்மையாரின் சிலை ஒன்றும், பொது நூலகத்துறை மூலம் ஒரு நூலகம் செயல்பட்டு வருகின்றது.
தமிழ்நாட்டில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கம் சென்னையில் உள்ள தன்னுடைய 600 ஆவது விற்பனை மையத்துக்கு தில்லையடி வள்ளியம்மை மாளிகை என பெயர் சூட்டியது.
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |