திருக்குறள் 4 அதிகாரம் | Thirukkural Adhikaram 4

Advertisement

 Thirukkural Adhikaram 4 in Tamil

திருவள்ளுவர் தனது அதிகாரத்தில் பல கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார். அந்த வகையில் திருவள்ளுவர் தனது நான்காவது அதிகாரத்தில் அறத்தை பற்றி விவரித்துள்ளார். அறம் என்பது ஒருவரிடம் இருக்கும் நல்ல பண்பை உணர்த்துவதாகும். அறத்தை பின்பற்றி வாழ்பவர்களின் வாழ்க்கை மேன்மையும், பெருமையும் அளவில்லாது கிடைக்கும் என்று கூறுகிறார் திருவள்ளுவர். சரி வாங்க திருவள்ளுவர் அறத்தை பற்றி குறள் மூலம் என்ன கூறுகிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அறன் வலியுறுத்தல் திருக்குறள் PDF 

அறன் வலியுறுத்தல் அதிகாரம் விளக்கம்:

குறள்: 31

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு

பொருள்:

அறத்தினை பண்பாக கொண்டு வாழ்பவரின் வாழ்க்கையில் செல்வமும், சிறப்புகளும் அளவில்லாது கிடைக்கும்.

மு. வரதராசன் உரை விளக்கம்: அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?

மு. கருணாநிதி உரை விளக்கம்: சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?

குறள்: 32

அறத்தின்ஊங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு.

பொருள்:

அறத்தை பின்பற்றி வாழ்ந்தால் அது தரும் உயர்வை போல் வேறு எதுவும் இல்லை, அதை பின்பற்றி வாழாதவர்களின் வாழ்க்கையில் சந்திக்கும் கெடுதலுக்கும் அளவில்லை.

மு. வரதராசன் உரை விளக்கம்: ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை

மு. கருணாநிதி உரை விளக்கம்: நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை

குறள்: 33

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்.

பொருள்:

செய்ய கூடிய செயல்கள் எந்த இடமாக இருந்தாலும் அங்கெல்லாம் அறச்செயலை தொய்வின்றி செய்ய வேண்டும்.

மு. வரதராசன் உரை விளக்கம்: செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.

மு. கருணாநிதி உரை விளக்கம்: செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.

குறள்: 34

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.

பொருள்:

அறம் என்பது மனதில் எவ்வித குற்றமும் இல்லாமல் இருப்பது தான். மனத்தூய்மை இல்லாத மற்றவையெல்லாம் வெறும் சடங்குகளே ஆகும்.

மு. வரதராசன் உரை விளக்கம்: ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.

மு. கருணாநிதி உரை விளக்கம்: மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.

குறள்: 35

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

பொருள்:

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் இந்த நான்கும் மனதில் இல்லாமல் வாழ்வதே அறமாகும்.

மு. வரதராசன் உரை விளக்கம்: பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.

மு. கருணாநிதி உரை விளக்கம்: பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.

குறள்: 36

அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

பொருள்:

அறம் செய்வதாக இருந்தால் உடனே செய்ய வேண்டும். நேரம், காலம் பார்த்து செய்யாமல் இருக்கும் அறமே சிறப்பை அடையும். காலம் கடந்து செய்யப்படும் அறம் பயனில்லாமல் போகும்.

மு. வரதராசன் உரை விளக்கம்: இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.

மு. கருணாநிதி உரை விளக்கம்: பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.

குறள்: 37

அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

பொருள்:

அறத்தை பின்பற்றி வாழ்பவரின் வாழ்க்கை பல்லக்கில் செல்பவரை போல இருக்கும். தீய வழியில் செல்பவரின் வாழ்க்கை பல்லக்கை சுமந்து செல்பவரை போல இருக்கும்.

மு. வரதராசன் உரை விளக்கம்: பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.

மு. கருணாநிதி உரை விளக்கம்: அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள் தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்.

குறள்: 38

வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதுஒருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.

பொருள்:

நாம் மற்றவர்களுக்கு செய்யும் நற்செயல்கள் தான், நம்முடைய வாழ்நாளில் நாம் அனுபவிக்கும் நற்பலன்களுக்கும், தீய பலன்களுக்கும் வழிவகுக்கும்.

மு. வரதராசன் உரை விளக்கம்: ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.

மு. கருணாநிதி உரை விளக்கம்: பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.

குறள்: 39

அறத்தான் வருவதே இன்பம்மற்று எல்லாம்
புறத்த புகழும் இல.

பொருள்:

நல்ல செயல்களை செய்து அதன் மூலம் கிடைக்கும் இன்பமும், புகழும் தான் நிலைபெற்றது. மற்ற செயல் மூலம் கிடைக்கும் இன்பங்கள் இன்பம் ஆகாது.

மு. வரதராசன் உரை விளக்கம்: அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா

மு. கருணாநிதி உரை விளக்கம்: தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும் அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது

குறள்: 40

செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்கு
உயற்பாலது ஓரும் பழி.

பொருள்:

அறத்தின் வழியில் செயல்படும் ஒருவரின் வாழ்க்கையில், மற்றவர்களால் பழி நேர்ந்தாலும் அது அவர்களுக்கு உயர்வை தருவதாக அமையும்.

மு. வரதராசன் உரை விளக்கம்: ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.

மு. கருணாநிதி உரை விளக்கம்: பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.

திருக்குறள் அதிகாரம் 9

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement