வாசி தீரவே காசு நல்குவீர் | Vasi Theerave Lyrics in Tamil
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் வாசி தீரவே காசு நல்குவீர் பாடல் வரிகள் பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக இந்த பதிகமானது பணம், புகழ், செல்வம் போன்ற வளங்கள் குறையாமல் பெருகிக் கொண்டிருக்க தினமும் சொல்ல வேண்டிய பதிகமாகும். அதனால் இந்த பதிவின் வாயிலாக இந்த வாசி தீரவே காசு நல்குவீர் பாடல் வரிகள் பற்றியும், வாசி தீரவே பொருள் என்ன என்பதை பற்றியும், மற்றும் வாசி தீரவே காசு நல்குவீர் பொருள் என்ன என்பதை பற்றியும் தான் சொல்லப்போகின்றோம். ஆகையால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
வாசி தீரவே காசு நல்குவீர் பொருள்:
பொதுவாக இந்த வாசி தீரவே காசு நல்குவீர் என்ற பதிகத்தை திருஞானசம்பந்தர் தான் பாடினார். திருஞானசம்பந்தர் அவர்கள், திருவீழிமிழலை என்னும் தலத்தில் வாசி தீரவே காசு நல்குவீர் என்ற பாடலை பாடி இறைவனிடமிருந்து படிக்காசு பெற்று, அப்பொற்காசுகளை விற்று பஞ்சத்தில் இருந்த மக்களுக்கு உணவளித்தார் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மேலும் இந்த சிவாலயத்தின் மூலவர் வீழிநாதேஸ்வரர் என்றும், தாயார் சுந்தரகுசாம்பிகை என்றும் சொல்லப்படுகிறது.
ஆகவே வந்த வாசி தீரவே காசு நல்குவீர் என்ற பதிகத்தை பாடினால் தேடிய செல்வம் நிலைத்திருக்கும் என்றும், செல்வம் தேவையில்லாமல் கரையாது என்றும் சொல்லப்படுகிறது.
அதுபோல வாசி தீரவே காசு நல்குவீர் பொருள் என்னவென்றால், வாசி – உயர்வு தாழ்வு, மாசு – குற்றம், ஏசல் – ஏசுவது, நிந்திப்பது என்ற பொருளை தருகிறது.
அதாவது வாசி தீரவே காசு நல்குவீர் பொருள் என்பதற்கு – குற்றமில்லாத மிழலையில் எழுந்தருளியிருக்கும் ஈசரே, நான் கூறுவது பழிப்போ,குற்றமோ,நிந்தனையோ அல்ல;ஆனால் எனக்கு வழங்கும் காசில் உயர்வு,தாழ்வு நீங்குமாறு,குற்றமற்ற காசை கொடுப்பீராக என்பது பொருள் ஆகும்.
மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாடல் வரிகள்
வாசி தீரவே காசு நல்குவீர் பாடல் வரிகள்:
- இந்த பாடலில் நூல் முதலாம் திருமுறை ஆகும்.
- இதன் ஆசிரியர் திருஞானசம்பந்தர் ஆவார்.
- இது திருவிழிமிழலைப் பதிகம் ஆகும்.
- இதில் 1-11 பாடல்கள் உள்ளன.
வாசி தீரவே காசு நல்குவீர்
மாசின் மிழலையீர் ஏச லில்லையே.
இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே.
செய்ய மேனியீர் மெய்கொண் மிழலையீர்
பைகொ ளரவினீர் உய்ய நல்குமே.
நீறு பூசினீர் ஏற தேறினீர்
கூறு மிழலையீர் பேறு மருளுமே.
காமன் வேவவோர் தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர் சேம நல்குமே.
பிணிகொள் சடையினீர் மணிகொண் மிடறினீர்
அணிகொண் மிழலையீர் பணிகொண் டருளுமே.
மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே.
அரக்க னெரிதர இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே.
அயனு மாலுமாய் முயலு முடியினீர்
இயலு மிழலையீர் பயனு மருளுமே.
பறிகொள் தலையினார் அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிறிவ தரியதே.
காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல் தாழு மொழிகளே.
வாசி தீரவே காசு நல்குவீர் பாடல் பொருள்:
1. வாசி தீரவே காசு நல்குவீர்
மாசின் மிழலையீர் ஏசல் இல்லையே.
வாசி- உயர்வு தாழ்வு, மாசு- குற்றம், ஏசல்-ஏசுவது,நிந்திப்பது
பொருள்: குற்றமில்லாத மிழலையில் எழுந்தருளியிருக்கும் ஈசரே, நான் கூறுவது பழிப்போ,குற்றமோ,நிந்தனையோ அல்ல;ஆனால் எனக்கு வழங்கும் காசில் உயர்வு,தாழ்வு நீங்குமாறு,குற்றமற்ற காசை கொடுப்பீராக..
2. இறைவர் ஆயினீர் மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே.
கறை கொள்- குற்றமுள்ள, முறைமை- ஒழுங்கு செய்தல்
பொருள்: நீரே இறைவராக இருக்கின்றீர்,வேதநெறிகளோடு இருக்கும் மிழலையில் நீரே இறைவராக இருக்கிறீர்..குற்றமுடன் அளிக்கப் படும் காசை,சரி செய்து முறைப்படுத்தி,தூய பொற்காசாக வழங்குவீர்..
3. செய்ய மேனியீர் மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர் உய்ய நல்குமே.
செய்ய-சிவந்த; மெய்கொள்- உண்மை நிரம்பிய; பை – படம்; அரவு – பாம்பு; உய்ய- உயர, மேல்நிலையடைய,
பொருள்: படம் எடுத்திருக்கும் பாம்பை அணிகலனாகப் பூண்டு,சிவந்த மேனியைக் கொண்டு,உண்மை நிரம்பிய மக்கள் வாழும் மிழலையின் இறைவரே, நான் உய்யுமாறு குறைவற்ற காசை வழங்குவீர்.!
4. நீறு பூசினீர் ஏற தேறினீர்
கூறு மிழலையீர் பேறும் அருளுமே.
நீறு- திருநீறு ; ஏறு- எருது(ஆநேறு); கூறு- கூறப்படும்,புகழப்படும்; பேறு- பெரும் செல்வம், வீடுபேறு என்னும் முக்தி
பொருள்: திருநீறு அணிந்து எருதின் மேலேறித் திகழ்கின்ற, பெரும் புகழ் படைத்த, மிழலையின் இறைவரே, (குறைவற்ற காசை நல்குவதோடு) எனக்கு வீடுபேறையும் அருளிச் செய்வீர்.
5. காமன் வேவ ஓர் தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர் சேம நல்குமே.
காமன்- மன்மதன்; தூமம்- புகை; தூமக்கண்- புகையுடைய தீக்கண்ணான நெற்றிக்கண் ; நாமம்-பெயர்,புகழ் ; சேமம்-பாதுகாவல்.
பொருள்: மன்மதனை எரித்த, தீஞ்சுடரை உடைய நெற்றிக்கண்ணை உடைய, புகழ் பொருந்திய மிழலையின் இறைவரே, (குற்றமற்ற காசை வழங்குவதோடு) எமக்குப் பாதுகாவலும்,அரணும் வழங்கி எம்மைப் பாதுகாத்தருள்க..
6. பிணிகொள் சடையினீர் மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர் பணிகொண்டு அருளுமே.
பிணிகொள்- கட்டப்பெற்ற,பிணித்தல் என்றால் கட்டுவது என்பதும் ஒரு பொருள்; மிடறு- தொண்டை, கண்டம் ; அணி- அழகிய ஆபரணம்
பொருள்: கட்டப்பட்ட சடையும், கண்டத்தில் மணியும் கொண்டவரே, அழகிய அணிகலண்களை அணிந்த, மிழலையின் இறைவரே, எம்மை ஆட்கொண்டு, பணி கொண்டு அருளுவீர்..
7. மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே.
பங்கு- பகுதி ; துங்கம்- உயர்வு ; சங்கை – சந்தேகம் ; தவிர்- நீக்கு
பொருள்: அம்மையை ஒரு பாகமாக உடைய, உயர்வுடைய மிழலையின் இறைவரே, கங்கையை முடிமேல் கொண்டிருப்பவரே, எங்களது ஐயத்தைத் தவிர்க்க, (குறைவற்ற காசை வழங்கி அருள்க..)
8. அரக்கன் நெரிதர இரக்கம் எய்தினீர்
பரக்கும் மிழலையீர் கரக்கை தவிர்மினே.
நெரிதர- அகப்பட்டு நெரிய ; பரக்கும்- எங்கும் புகழ் பரவிய ; கரக்கை- வஞ்சம்
பொருள்: இராவணன் மலைக்கு அடியில் அகப்பட்ட நெரிபடும் போது அவனுக்கு இரக்கம் காண்பித்தீர், எங்கும் புகழ் பரவிய மிழலையின் இறைவரே, எமக்கு வஞ்சம் செய்வதைத் தவிர்த்து (குறைவற்ற காசை நல்குவீர்).
9. அயனும் மாலுமாய் முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர் பயனும் அருளுமே.
அயன்-நான்முகன் ; மால்-திருமால் ; முயலும்-முயற்சித்த ; முடி – அடியும்,முடியும்(குறிப்பால் அமைந்த சொல்) ; இயலும்- அனைவருக்கும் இயலும் நிலையில் ; பயன் – பிறவியின் பயனான வீடுபேறு
பொருள்: திருமாலும் நான்முகனும் தேடி அடைய முயன்றாலும் முடியாத அடியையும் முடியையும் கொண்டிருந்தாலும், (உனது அடியவர்களுக்கு) எளிதில் அடையத்தக்க நிலையில், மிழலையில் எழுந்தருளியிருக்கும் இறைவரே, எமக்கு பிறவியின் பயனான வீடுபேறை அருளுவீர்..!
10. பறிகொள் தலையினார் அறிவது அறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிறிவது அரியதே.
பறிகொள் – முடியைப் பறித்துக் கொண்ட நிலையில் ; அறிவது- அறிய வேண்டிய ; அறிகிலார் – அறிய மாட்டார் ; வெறி – மணம் ; பிறிவது-பிறவாக இருப்பது, பிரிவது ; அரியது- கடினமானது
பொருள்: தலைமுடியைப் பறித்து கொண்ட நிலையில் தலைகளையுடைய சமணர்கள், அறிய வேண்டிய உண்மைகளை அறிய மாட்டார்; மணம் பொருந்திய மிழலையின் இறைவரே, உம்மைப் பிரிந்து இருப்பது இனி மிகக் கடினமானது.
11. காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல் தாழும் மொழிகளே.
காழி-சீர்காழி ; வாழி- வாழ்கின்ற வீழி மிழலை- திருவிழீ மழலை; தாழும் – தாழ்ந்து போற்றி
பொருள்: சீர்காழியில் தோன்றி வாழ்ந்த சம்பந்தனான அடியேன், திரு விழீமிழலையில் வீற்றிருக்கும் இறைவரைத் தாழ்ந்து பணிந்து போற்றிய மொழிகள் இவை.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |