கடவுள் வாழ்த்து திருக்குறள் | Thirukkural Kadavul Vazhthu

Advertisement

திருக்குறள் கடவுள் வாழ்த்து குறள் விளக்கம் – Thirukkural Kadavul Vazhthu

உலக பொதுமறை நூலாக சிறந்து விளங்குவது திருக்குறள். திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன.. திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர். திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கிமு 31. இந்த திருக்குறளில் மொத்தம் எத்தனை எழுத்துக்கள் உள்ளது என்று தெரியுமா? திருக்குறளில் மொத்தம் 42,194 உள்ளன. திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே ஒரு உயிரெழுத்து எது? அப்படினா ஒள என்ற உயிரெழுத்துக்கள் தான் திருக்குறளில் பயன்படுத்தாத உயிரெழுத்து ஆகும். இது போன்று திருக்குறள் பற்றிய சுவாரசியமான தகவல்கள் இருக்கிறது. திருக்குறள் பற்றிய அரிய தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் (திருக்குறள் பற்றிய வினா விடை). சரி இந்த பதிவில் அதிகாரம் 1 அதாவது கடவுள் வாழ்த்து திருக்குறள் மற்றும் அதன் விளக்கங்களை பற்றி படித்தறியலாம் வாங்க.

கடவுள் வாழ்த்து திருக்குறள் pdf

திருக்குறள் கடவுள் வாழ்த்து:

குறள்: 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

குறள் விளக்கம்:

எழுத்துகளெல்லாம் ‘அ’ எழுத்தைத் தமக்கு முதலெழுத்தாகக் கொண்டுள்ளன. அதுபோல் உலகத்து உயிர்கள் கடவுளைத் தமக்கு முதலாகக் கொண்டுள்ளன.

மு. வரதராசன் உரை விளக்கம்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

மு. கருணாநிதி உரை விளக்கம்: அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.


குறள்: 2

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

குறள் விளக்கம்:

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஒரு பயனும் இல்லை.

மு. வரதராசன் உரை விளக்கம்: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?

மு. கருணாநிதி உரை விளக்கம்: தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.


குறள்: 3

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

குறள் விளக்கம்:

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வர்.

மு. வரதராசன் உரை விளக்கம்: அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.

மு. கருணாநிதி உரை விளக்கம்: மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.


குறள்: 4

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

குறள் விளக்கம்:

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை நினைப்பவருக்கு எப்பொழுதும் துன்பம் இல்லை.

மு. வரதராசன் உரை விளக்கம்: விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.

மு. கருணாநிதி உரை விளக்கம்: விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.


குறள்: 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

குறள் விளக்கம்:

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம், அறியாமையால் வரும் நல்வினை, தீவினை ஆகிய இரு வினைகளும் வந்து சேர்வதில்லை.

மு. வரதராசன் உரை விளக்கம்: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.

மு. கருணாநிதி உரை விளக்கம்: இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.


குறள்: 6

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

குறள் விளக்கம்:

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப்பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழிக்க நெறியில் நின்றவர், நிலைபெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

மு. வரதராசன் உரை விளக்கம்: ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்.

மு. கருணாநிதி உரை விளக்கம்: மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.


குறள்: 7

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

குறள் விளக்கம்:

தனக்கு ஒப்பில்லாத கடவுளின் திருவடிகளைத் தவறாது நினைப்பவர்க்கல்லாமல், மற்றவர்க்கு மனக் கவலையைப் போக்க முடியாது.

மு. வரதராசன் உரை விளக்கம்: தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.

மு. கருணாநிதி உரை விளக்கம்: ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.


குறள்: 8

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

குறள் விளக்கம்:

அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாகிய கடலை நீந்திக் கடப்பது கடினம்.

மு. வரதராசன் உரை விளக்கம்: அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.

மு. கருணாநிதி உரை விளக்கம்: அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.


குறள்: 9

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

குறள் விளக்கம்:

கேட்காத செவி; பார்க்காத கண் முதலியன போல் எண்குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவையாகும்.

மு. வரதராசன் உரை விளக்கம்: கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.

மு. கருணாநிதி உரை விளக்கம்: உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.


குறள்: 10

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

குறள் விளக்கம்:

கடவுளின் திருவடிகளை அடைந்தவர், பிறவியாகிய பெரிய கடலை கடப்பார், அடையாதவர் அதனைக் கடக்கமாட்டார்.

மு. வரதராசன் உரை விளக்கம்: இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

சாலமன் பாப்பையா உரை விளக்கம்: கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.

மு. கருணாநிதி உரை விளக்கம்: வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.


 

தொடர்புடைய பதிவு:
திருக்குறள் பற்றிய சிறப்பு கட்டுரை
திருக்குறள் சிறப்புகள்
10 எளிமையான திருக்குறள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement